ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் 1 செப்டம்பர் முதல் பக்தர்கள் கோயிலுக்குள் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை கோயில்கள் மற்றும் பெரிய கோயில்களில் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம், பக்தர்களின் கைப்பேசிகளை பாதுகாக்க நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பெட்டக வசதியை ஏற்பாடு செய்துள்ளது. கைப்பேசியைக் கொண்டு வரும் பக்தர்களின் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு, பெட்டகத்தில் பாதுகாக்கப்படும். இதற்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும்.
முக்கிய நுழைவு வாயிலான தெற்கு வாசல் பகுதியில், காலணிகளை வைக்கும் இடத்திற்கு அருகே கைப்பேசிகளை பாதுகாக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 பக்தர்களின் கைப்பேசிகளை வைத்துக் கொள்ள வசதியான பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு வாசல் மற்றும் தெற்கு வாசல் பகுதிகளில் தலா 500 பாதுகாப்பு பெட்டக அறைகள் ஏற்பாடு செய்யப்படும். மொத்தம் 3,000 பெட்டக அறைகளில் 15,000 கைப்பேசிகளை பாதுகாக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று இடங்களிலும் கணினி ரசீது வழங்கப்படும். பக்தர்கள் ரசீதை இழந்தால், அவர்கள் கொண்டு வந்துள்ள முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கடிதம் எழுதி தங்கள் கைப்பேசியை பெற்றுக் கொள்ளலாம். மூன்று இடங்களிலும் தலா 5 போர் வீதம், மொத்தம் 15 போர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
தற்போது பண பரிவர்த்தனைகள் முக்கியமாக கைப்பேசி மூலமே நடைபெறுகின்றன. பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், கைப்பேசி வைக்கும் இடத்தில் உள்ள பார்கோட் மூலம் அதை அளிக்கலாம் என கோயில் இணை ஆணையர் செ. சிவராம் குமார் தெரிவித்தார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.