விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே சாலையோரம் இருந்த வேப்ப மரம் திடீரென சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகிலுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், காவல் துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், மரத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின் வாரிய ஊழியர்களும், காவல் துறையினரும் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. மரம் அகற்றப்பட்டதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.