பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (இடபிள்யூஎஸ்) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அதிமுக உறுப்பினர்களிடையே சட்டமன்றத்தில் மாறுபட்ட கருத்து எழுந்தது. அதேபோன்று, அவையில் நடந்து கொண்ட விதம் குறித்து அதிமுக-திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்சாரம், சட்டம், சிறைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், ‘திமுக ஆட்சியின்போது என் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; கடந்த காலத்தில் சட்டமன்ற மரபுகளை மீறி அவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்தது யார்?, குழப்பம் ஏற்படுத்தியவர்கள் எவர்? என்பது அனைவருக்கும் தெரியும்; மேலும் பேசினால் நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும்’ என்றார்.
அதற்குப் பதிலளித்த திமுக உறுப்பினர் கே.என்.நேரு, ‘அதிமுக ஆட்சியாளர்கள் எனக்கு எதிராக 14 வழக்குகளைப் பதிவு செய்தனர்; பேசுவதற்கு எங்களிடமும் நிறைய உள்ளது’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ‘இதுபோன்ற விவாதங்களை வெளியே மேடை போட்டு இரு தரப்பும் பேசுங்கள்; நாங்கள் கேட்க ஆர்வமாக இருக்கிறோம்’ என்றார்.
இதனிடையே, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இடஒதுக்கீடு குறித்துப் பேசிய தளவாய் சுந்தரம், அதை தமிழகத்தில் அமல்படுத்தாததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறைந்தது 5 சதவீத இடஒதுக்கீடாவது அந்தப் பிரிவின் கீழ் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது அதற்கு எதிராக அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியதாவது: தளவாய் சுந்தரம் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதிமுக சமூக நீதி காக்கும் இயக்கம். எங்களுக்கு அந்த இடஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய ஆளுநர் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கினால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினார். அதற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாமல், தீர்க்கமாக இருந்து எந்த நிபந்தனையையும் ஏற்காமல் 7.5 சதவீத ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார் என்றார் சி.வி.சண்முகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.