மதுரை, ஆகஸ்ட் 22 –
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்ய துவக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன் உட்பட 19 பேர் மீது மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பத்திரப்பதிவிற்கு உதவியதாக திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தென்மலையைச் சேர்ந்த காளிகுமார் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சாய் சரவணன் இந்த மனுவை விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் பாண்டி வாதிட்டார்: “மனுதாரர் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பனின் கார் டிரைவர். இவரது பெயரில்தான் நிலம் பதிவு செய்யப்பட்டது. சார்பதிவாளரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, ஜாமின் அனுமதிக்கக்கூடாது” என்று கூறினார். இதனையடுத்து, நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.