சேர்க்கப்பட்டது: ஆகஸ்ட் 21, 2026 11:29 மு.ப.
தர்மபுரி: தர்மபுரி அருகே, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று தடை விதித்தனர்.
நாடு முழுவதும் செப்டெம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக களிமண், காகிதக்கூழ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத பொருட்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், களிமண் சிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீர்நிலைகளைப் பாதுகாக்க, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு அரசு மற்றும் நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில், தர்மபுரி – பாப்பாரப்பட்டி சாலையில், கடகத்தூர் பிரிவு சாலை அருகே, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தயாரித்த விநாயகர் சிலைகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அந்த சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பவுடரில் தயாரிக்கப்பட்டது தெரிந்ததும், அவற்றின் விற்பனைக்கு தடை விதித்து, அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.