தொழில்முனைவோர் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நுகர்வோர்களின் தேவைகளுக்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த ‘மேட் இன் புதுச்சேரி’ லோகோ வெளியிடும் விழாவில் பேசிய கவர்னர் கைலாஷ்நாதன், “பாண்பேய்ட் மேட் இன் புதுச்சேரி” என்ற அறிமுகம், புதுச்சேரியின் தனித்தன்மையை அதன் தயாரிப்புகள் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியின் தொடக்கம் என்றார். இந்தியாவில் புதுச்சேரிக்கு வரலாறு, பாரம்பரியம், கட்டடக்கலை, கலாசாரம், சுற்றுலா என ஒரு தனி அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தோடு, உற்பத்தி திறன் மற்றும் தொழில்முனைவோரின் திறனையும் இணைத்துக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘மேட் இன் புதுச்சேரி’ மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் தரமானவை என்ற நம்பிக்கை நுகர்வோர்களுக்கு ஏற்பட வேண்டும். தயாரிப்புகளின் தரம், வடிவம், புதுமை, நுகர்வோர் அனுபவம் ஆகிய அனைத்திலும் உயர்ந்த நிலையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ‘மேட் இன் புதுச்சேரி’ என்ற முத்திரையோடு வெளிவரும் தயாரிப்புகளில் புதுச்சேரி பெயரையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது என்பதை தொழில்முனைவோர் நினைவில் கொள்ள வேண்டும். நாம் உலகளவில் மிகவும் போட்டிநிறைந்த சந்தை சூழலில் உள்ளோம். எனவே, புதுச்சேரியின் தயாரிப்புகள் மற்ற தயாரிப்புகளிலிருந்து தனித்து நிற்க வேண்டும். புதுமை, தரம் இரண்டும் முயற்சியின் அடித்தளமாக இருக்க வேண்டும். தொழில்முனைவோர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி, நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத உற்பத்தி முறைகள், மூலதனங்களைப் பொறுப்போடு பயன்படுத்துவதில் புதுச்சேரி முன்னுதாரணமாக உருவாக வேண்டும் என்றும் கவர்னர் கைலாஷ்நாதன் வலியுறுத்தினார்.