தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும், பெண்களுக்கான இடஒதுக்கீடு மூலமே அவர்களின் அரசியல் வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.
கும்பாபிஷேக பணிகளை துரிதமாகவும், கவனமுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மதுரையில் இருந்து பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வைகை ஆற்றின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறிய தமிழிசை சௌந்தரராஜன், வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.