சேர்க்கப்பட்டது: 2026 ஆகஸ்ட் 21, மாலை 11:34
ஒட்டன்சத்திரம், ஆகஸ்ட் 22 –
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான சின்னக்குளக்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை தற்போது நன்றாக வளர்ந்துள்ளன. நேற்று குளக்கரையில் உள்ள மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. நன்றாக வளர்ந்த பல மரங்கள் தீயில் கருகின.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் இந்த மரங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அப்பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.