புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர்கள் கிரிதார் மற்றும் கவின் ஆகியோர், ஐ.ஐ.டி., குவஹாத்தி மாணவர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட டெக்னோத்லான் 2026 போட்டியில் அகில இந்திய அளவில் 28-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர்.
டெக்னோத்லான் 2026 என்பது ஐ.ஐ.டி., குவஹாத்தி மாணவர் அமைப்பினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச அளவிலான பள்ளி மாணவர் அறிவுத்திறன் போட்டியாகும். இப்போட்டி இந்தியாவின் 1,550 மையங்களில் நடைபெற்றது. 23-வது டெக்னோத்லான் போட்டியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டி, மாணவர்களின் மனப்பாடத்திறன், தர்க்க சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன், படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இந்தப் போட்டியில், ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவர்கள் அகில இந்திய அளவில் 28-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர். இச்சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் கிரிதார் மற்றும் கவின் ஆகியோரை, ஆதித்யா பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த் மற்றும் வித்யநாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் வாழ்த்தினர்.
மாணவர்களின் சாதனையை நிறுவனர் ஆனந்தன் சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும், இச்சாதனைக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஆதித்யா வித்யாஷ்ரம் கல்வி குழுமத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.